Monday, March 4, 2013

இலாஹ் - இறைவன். சொற்பொருள் ஆய்வு.

எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

பல இஸ்லாமிய சகோதரர்களுக்கு தங்களுடைய இறைமையியல் தத்துவங்கள் சரியாக தெரியாமல் இருக்கிறார்கள். விளைவு தர்ஹா வழிபாடு போன்ற ஒரிறைக்கு எதிரான திசை நோக்கி போய் விடுகிறார்கள். அவர்களுக்கு சரியான விளக்கமளிப்பதற்காகவே இப்பதிவு.


குர்ஆனின் அடித்தளம் ஓரிறைக் கொள்கையே ஆகும்.

இதர மதங்களும்,நெறிகளும்கூட தொடக்கத்தில் ஓரிறைக் கொள்கையை போதித்தாலும்,காலப் போக்கில் அதில் நெகிழ்வுகளும்,பிறழ்வுகளும் ஏற்பட்டு ஒன்று மூன்றாகி,மூன்று முப்பதாகி,முப்பது முப்பது கோடியாகி எண்ணற்றக் கடவுள்கள் உருவாகி விட்டனர்.

ஆனால் இஸ்லாம் ஒரிறைக் கொள்கையில் ஏகத்துவ நெறியில் இன்றுவரை நிலைத்துநின்று நீடு புகழ் கொண்டுள்ளது.  ‘இலாஹ்’ என்கிற இந்த சொல் குர்ஆனில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல். இந்த சொல்லின் உண்மையான பொருளை ஒருவர் விளங்கிக் கொண்டால் இணைவைப்பின் பக்கம் அவர் தலைவைத்தும் படுக்கமாட்டார். இணைவைப்புச் சிந்தனை அவருடைய கனவிலும் தோன்றாது.


அலீஃப், லாம், ஹே என்பது இந்தச் சொல்லின் மூலமாகும். இந்த மூலத்தைக் கொண்டு அகராதியில் வந்துள்ள சொற்கள் பின்வருவன:

اله اذا تحير
வியப்பும் ஆச்சரியமும் கொண்டான்.

الهت الى فلان اي سكنت اليه
அவனுடைய பாதுகாப்பில் சென்று அல்லது அவனுடன் தொடர்பு கொண்டு நான் அமைதியும் திருப்தியும் அடைந்தேன்.

اله الرجل يأله اذا فرغ من امر نزل به فألهه به غيره اي لجاره
மனிதன் ஏதோ துன்பம் அல்லது துயரத்தின் வருகையால் அச்சமுற்றான். அடுத்தவன் அவனுக்கு அடைக்கலம் வழங்கினான்.

اله الرجل اتجه اليه لشلة شوقه اليه

மனிதன் அடுத்தவன் மீது கொண்டுள்ள ஆர்வ மிகுதியின் காரணத்தால் கவனிப்பைச் செலுத்தினான்.

اله الفضيل اذا ولع بأمه
காணாமல் போய் விட்ட ஒட்டகத்தின் குட்டி தாயைக் கண்டதும் தழுவிக் கொண்டது.

لاه يليه ليها ولاها اذا احتجب
மறைவாகி ஒளிந்து கொண்டது. மேலும் உயர்ந்து நின்றது.

اله الهة والوهة والوهية عبد
வழிபட்டேன்

இந்தப் பொருள்களின் தோற்றுவாயை நன்கு கூர்ந்து கவனிக்கும்போது அலஹ அல்லது லஹு இலாஹத்தன் உடைய பொருள் வழிபாடு என்பதாகவும் இலாஹ் என்பதின் பொருள் வணக்கத்திற்குரியவன் (இறைவன்) என்பதாகவும், இலாஹ் என்பதின் பொருள் வணக்கத்திற்குரியவன் (இறைவன்) என்பதாகவும் எந்த அடிப்படையில் ஏற்பட்டுள்ளது என்றால் -

1. மனித மனத்திலே வழிபாட்டிற்கான முதன்மையான தூண்டுதல் தேவையான பேரில் ஏற்படுகிறது. யாரேனும் ஒருவரைக் குறித்து அவர் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றக் கூடியவர், சஞ்சலமான காலங்களில் அமைதியை அளிப்பவர் எனும் எண்ணம் தோன்றாதவரை மனிதன் யாரையும் வழிபட நினைக்கவே மாட்டான்.

2. அதன்பின் தேவைகளைப் பூர்த்தியாக்குபவன் என ஒருவரை மனிதன் எண்ணிக் கொண்டு விட்டால் அந்த எண்ணத்துடன் அவரைத் தன்னைவிட உயர்ந்தவர் என்றும், படித்தரத்தில் மட்டுமின்றி எல்லாவிதத்திலும் அவருடைய மேன்மையை ஏற்றுக் கொண்டு வலிமையிலும் அதைகாரத்திலும் அவனையே முதல்வன் என்றும் ஏற்றுக் கொண்டுவிடுவது ஒரு பிரிக்க முடியாத பந்தமாகி விடுகிறது.

3. அதன் பின்னர் இதுவும் ஓர் உண்மையே. அதாவது - காரண காரியங்களின் தொடர்பாக எந்தப் பொருளைக் கொண்டு பொதுவாக மனிதனின் தேவைகள் பூர்த்தியாகின்றனவோ, எந்தத் தேவைக்குரிய செயல்பாடுகள் அனைத்தும் மனிதனின் கண்ணெதிரே அல்லது அவனுடைய அறிவின் எல்லைக்குள்ளே நிற்கின்றனவோ அதை வழிபட வேண்டும் என்கிற உணர்வு அவனுக்குள்ளே ஏற்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, எனக்கு செலவழிக்கப் பணம் தேவைப்படுகிறது. நான் ஒருவரிடம் சென்ரு வேலை கேட்கிறேன். அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எனக்கு ஏதோ ஒரு வேலையைக் கொடுக்கிறார். அதற்குரிய கூலியும் தருகிறார். இந்த செயல்கள் யாவும் என்னுடைய புலன்களின், அறிவின் எல்லைக்கு உள்ளேயே  நடைபெறுகின்றன. என்னுடைய தேவைகளை அவர் எவ்வாறு பூர்த்தியாகினார் என்பது எனக்கு தெரியும். எனவே அவர் வணக்கத்திற்குரியவர் எனும் கற்பனை கூட என் உள்ளத்தில் தோன்றுவதில்லை.

வணங்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள்ளத்தில் எந்த நிலையில் ஏற்படுமென்றால் ஒருவரின் ஆளுமையின் மீதோ அல்லது அவரது வலிமையின் மீதோ திரை விழுந்திருக்க வேண்டும். அதனால்தான் வணக்கத்திற்குரியோன் எனும் பொருளில் மேன்மை மட்டுமின்றி மறைவு, வியப்பு, பிரமிப்பு போன்ற கருத்துக்களும் அடங்கியுள்ளன.

4. தேவைகளின்போது அவற்றைப் பூர்த்தியாக்குபவன், ஆபத்துகளின்போது அடைக்கலம் தரக்கூடியவன், மனக் கலக்கத்தின் போது அமைதியை நல்குபவன் என்று யாரைப் பற்றி மனிதன் நம்பிக்கை கொண்டுள்ளானோ அவனை நோக்கித் தனது பற்றுதலையும் கவனத்தையும் செலுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே வணக்கத்துக்குரியவன் என்பதற்கான இலாஹ் எனும் சொல் எந்தேந்தப் பொருளின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளனவோ அவை வருமாறு: தேவையைப் பூர்த்தியாக்குபவன், அடைக்கலம் தருபவன், அமைதி அளிப்பவன், மேன்மையானவன், அதிகாரமுள்ளவன்.

எத்தைகைய அதிகாரங்களுக்கும் வலிமைக்கும் அவன் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்றால் அந்த வணக்கத்திற்குரியோன் தேவைகளை நிறைவேற்றுபவன்ம் ஆபத்தில் பாதுகாப்பு அளிப்பவன்ம் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆளுமையைக் கொண்டவன் அல்லது பொதுப் பார்வைக்கு வாரதவன், மேலும் மனிதனின் ஆழ்ந்த் பற்றுதலுக்குரியவன் - இப்படியெல்லாம் திகழும் அளவுக்கு அவனுடைய அதைகாரங்களும் வலிமையும் இருக்க வேண்டும்.

அறியாமைக்கால மக்களின் ‘இலாஹ்’ குறித்த கண்ணோட்டம்

இலாஹ் எனும் சொல்லின் அகாரதிப் பொருளைக் கண்டோம். இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது அராபியர்களும் பழங்குடி மக்களும் இறைமையைப் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தனர்; அவர்களின் அந்தக் கருத்தை குர்ஆன் எப்படி மாற்றி அமைக்க விரும்பியது என்பதைத்தான்.

 وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لِّيَكُونُوا لَهُمْ عِزًّا
தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(குர்ஆன் 19:81)

وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ
தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். (குர்ஆன் 36:74

மேற்சொன்ன இரண்டு வசனங்களிலிருந்தும் என்ன தெரிகிறது என்றால் அறியாமைக்கால அராபியர்களும் பழங்குடி மக்கள் எதனைக் கடவுள் என்று சொல்லி வந்தார்களோ அவை தங்களின் ஆதரவாளர்கள் என்றும், கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும் தமக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் என்றும், அவர்களின் உதவியைக் கொண்டு, தம் அச்சத்தை விட்டும் தோல்விகளை விட்டும் பாதுகாப்பாக இருப்போம் என்றும் நினைத்திருந்தார்கள்.

  وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِن ظَلَمُوا أَنفُسَهُمْ ۖ فَمَا أَغْنَتْ عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِن دُونِ اللَّهِ مِن شَيْءٍ لَّمَّا جَاءَ أَمْرُ رَبِّكَ ۖ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ
அவர்களுக்கு நாம் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்கே தீங்கு இழைத்தனர். உமது இறைவனின் கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அவை அதிகப்படுத்தவில்லை. (அல்குர்ஆன்: 11:101)

 وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ

  أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ
 إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحدٌ ۚ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.உங்கள் இறைவன் ஒரே இறைவனே. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர்கள். (குர்ஆன் 16:20,21,22 )

  وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۘ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ ۚ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ


அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (குர்ஆன் 28 :88)

  أَلَا إِنَّ لِلَّهِ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ۗ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ


கவனத்தில் கொள்க! வானங் களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ் வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வையன்றி தெய்வங்களை அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் கற்பனை செய்வோராகவே உள்ளனர். (குர்ஆன் 10:66)

இந்த வசனங்களிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.ஒன்று, அறியாமைக் கால மக்கள் யாரைக் கடவுள் என்று கூறினார்களோ அவர்களை அந்த மக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அழைத்தார்கள். அதாவது பிரார்த்தனை செய்தார்கள்.

இரண்டு, அவர்கள் ஜின்களையும்,வானவர்களையும்,தெய்வங்களையும் மட்டுமில்லாமல் மரணித்தவர்களையும் கடவுளாய்க் கருதி அழைத்து வந்தனர். أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ ۖ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ அவர்கள் இறந்து போனவர்களே தவிர உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் எப்போது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறியமாட்டார்கள், எனும் வசனத்திலிருந்து நன்கு தெளிவாகிறது.

மூன்று, அந்த தெய்வங்கள் அவர்களுடைய துஆவைக் கேட்பவர்களாகவும் அவர்களுக்கு உதவிபுரிய ஓடியாடிச் செல்வதற்கு அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர் என்றும் அவர்கள் நம்பி வந்தனர்.

இங்கே அவர்கள் தம் கடவுளிடம் எதிர்பார்க்கின்ற துஆவின் கருத்தையும் அவர்களுடைய உதவி புரியும் தன்மையையும் நினைவில் பதிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எனக்கு தாகம் எடுக்கிறது. தண்ணீர் கொண்டுவரும்படி நான் என் பணியாளனை அழைக்கிறேன். அல்லது நான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவரை அழைக்கிறேன். இங்கே அவை துஆவின் கருத்தில் வருவதில்லை; பணியாளோ மருத்துவரோ கடவுளாகி விடுவதுமில்லை. ஏனெனில் இவை யாவுமே காரண காரியங்களின் அடிப்படையில் வருகிறதே தவிர அதனைக் கடந்து அல்ல.


ஆனால் நான் தாகமெடுத்த நிலையிலோ நோய்வாய்ப்பட்டபோதோ பணியாளையோ மருத்துவரையோ அழைப்பதற்குப் பதிலாக யாரோ ஓர் இறைநேசரை அல்லது ஒரு தெய்வத்தை அழைக்கிறேன் என்றால் நிச்சயமாக அவர்களை நான் கடவுளாக்கி இறைஞ்சினேன் என்று பொருளாகும். ஏனெனில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் ஏதோ ஒரு சமாதியில் அடக்கப்பட்ட இறைநேசரை அழைப்பதன் பொருள், எல்லாவற்றையும் கேட்பவராகவும் பார்ப்பவராகவும் அவரை நான் கணித்துக் கொண்டேன் என்றாகிறது. இக்காரண காரிய உலகின் மீது அவர்களுடைய ஆட்சியதிகாரம் செல்வதாகவும், அதைக் கொண்டே அவர்கள் என்னிடம் தண்ணீரை அனுப்பும் சக்தியை, என் நோய் தீர்க்கும் ஆற்றலைப் பெற்று உள்ளனர் என்றும் நான் நினைக்கிறேன் என்றாகிறது.

அதே போலாந்த நிலையில் ஏதோ ஒரு தெய்வத்தை அழைப்பதற்குரிய பொருள்;என்னவேன்றால் தண்ணீரின் மீதோ நோயின் மீதோ அதற்கு அதிகாரம் உள்ளது; இயல்புக்கு அப்பாற்பட்டு காரன காரியங்களை இயக்கும் வல்லமை பெற்றுள்ளது என்பதாகும். இயல்புக்கு அப்பாற்பட்ட அதிகாரமும் சக்தியும் அந்தக் கடவுளுக்கு உண்டு என்ற கருத்தின் அடிப்படையில்தான் துஆ -பிரார்த்தனை செய்யப்படுகிறது. இது மோசடியாகும்.

(இன்ஷா அல்லாஹ் இன்னும் விரிவாக அடுத்த பாகத்தில் தொடரும்)

(Reference :குர் ஆன் ஹதீஸ்
நூல் : அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள்.

No comments:

Post a Comment